×

மாநகராட்சி சார்பில் வீடுவீடாக சென்று ஆய்வு: தொடர் கண்காணிப்பு வளையத்தில் 661 பேரை வைக்க அதிகாரிகள் முடிவு: சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ததில், 661 பேரை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் வரை சென்னையில் 163 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 24 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், அண்ணா நகரில் 17 ேபரும், தண்டையார்பேட்டையில் 14 பேரும், தேனாம்பேட்டையில் 12 பேரும், பெருங்குடியில் 6 பேரும், திருவொற்றியூர், வளரசவாக்கம், அடையாறு மண்டலத்தில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா 2 பேரும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் வசித்த இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு சோதனை செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி 15 மண்டலங்களில் இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் 100 வீடுகள் அடங்கிய பகுதியாக பிரிக்கப்பட்டு மொத்தம் 12,203 பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை ஆய்வு செய்ய 10,566 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 8ம் தேதி வரை 24 லட்சத்து 87 ஆயிரத்து 852 வீடுகளில் உள்ள 37 லட்சத்து 11 ஆயிரத்து 531 பொதுமக்களிடம் ஆய்வு செய்தனர். இதில் காய்ச்சல், சளி, இருமல் உள்ள 695 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 291 பேர் குணமடைந்துவிட்டனர். மீதம் உள்ள 404 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.   

இதையடுத்து நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின்படி 42 லட்சத்து 3 ஆயிரத்து 287 வீடுகளில் உள்ள 67,56,687 மக்களிடம் ஆய்வு நடத்தினர். அதில் 1973 பேருக்கு சாதாரணமான சளி, காய்ச்சல் இருந்தது. இவர்களில் 1,312 பேர் சரியாகி விட்டனர். மீதமுள்ள 661 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 1312 பேரும் சில வாரங்களுக்கு கண்காணிப்பில் இருப்பார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.



Tags : Municipalities , Madras Corporation, Department of Health, Corona
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு