சென்னை: கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பின. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளிலும் 6.25 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஆனாலும் கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. தற்போது, ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் லாரிகள் மூலம் வழங்கக்கூடிய தண்ணீரை பிடிக்க மக்கள் வரிசையில் நிற்கும் சூழ்நிலை உருவாகும். எனவே, மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராத வகையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் உள்ளது. இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் திறப்பை நேற்றுடன் ஆந்திர அரசு நிறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வறட்சியை சந்தித்த நிலையில் இந்த ஆண்டு அப்படியொரு நிலையை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக 40 டிஎம்சி இருப்பு இருந்த கண்டலேறு அணையில் இருந்து 12 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற்றுவிட வேண்டும் என்பதில் தமிழக அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதுவரை 7.53 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து சராசரியாக 350 கனஅடி என்ற அடிப்படையில் வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கோடை தட்டுப்பாட்டை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர அதிகாரிகளிடம் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள், ‘தற்போது கண்டலேறு அணையில் 26.53 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அடுத்த மாதம் அரை டிஎம்சி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.