சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு தொடங்கி 17 நாட்கள் ஆகியும், கொரோனா வைரஸ் தாக்குதல் குறையாமல் இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் ெகாரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டைச் சேர்ந்த 26 பேருக்கும், நெல்லையைச் சேர்ந்த 16 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 59,916. அரசு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 280. 28 நாள் கண்காணிப்பு முடித்தவர்கள் 32,896. அறிகுறி உள்ள 7,267 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வரை (ஏப்.8) கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738. நேற்று (ஏப்.9) புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 96 பேர். இதில் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 84 பேர். 3 பேர் வெளி மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளனர். 9 பேர் தொடர்பில் இருந்தவர்கள்.
ஒருவர் மருத்துவர். அரசு மருத்துவமனையில் 8 பேர் உடல் நலம் கடும்பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் ஒருவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். மீதம் உள்ள அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளது. தற்போது 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,480 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 763 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 34 மாவட்டங்களில் 16 லட்சத்து 61 ஆயிரத்து 487 வீடுகளில் உள்ள 58 லட்சத்து 77 ஆயிரத்து 348 பொதுமக்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
தற்போது உள்ள பரிசோதனை கருவி, கொரோனா வைரசின் ஆர்என்ஏவை சோதனை செய்து வைரஸ் தாக்கி இருப்பதை உறுதி செய்யும். இந்த பரிசோதனை முடிய 6 மணி நேரம் ஆகும். தற்போது ஆடர் செய்யப்பட்டுள்ள ேரபிட் சோதனை கருவி மூலம் 30 நிமிடத்தில் முடிவு தெரியும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 60 பேரும், ஈரோட்டில் 58 பேருக்கும், ெநல்லையில் 56 பேருக்கும், திண்டுக்கலில் 46 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 நாளில் 600 பேருக்கு பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த 8 நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப். 1ம் வரை 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. நேற்றைய நிலவரப்படி 834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட 8 நாட்களில் மட்டும் 600 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
தேதி பாதிப்பு மொத்தம்
ஏப்.1 110 234
ஏப்.2 75 309
ஏப்.3 102 411
ஏப்.4 74 485
ஏப்.5 86 571
ஏப்.6 50 621
ஏப்.7 69 690
ஏப்.8 48 738
ஏப்.9 96 834