சென்னை: தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 89 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734-லிருந்து 5,865-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ள நிலையில் 478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த வைரஸ் தமிழகத்திலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
* தமிழகத்தில் 59,918 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பில் 213 பேர் உள்ளனர்.
* இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்.
* தமிழகத்தில் 6 பேர் உடல்நலம் சரியில்லமால் உள்ளனர். 5 பேரை தவிர மற்ற அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது.
* தமிழகத்தில் போதுமான அளவு முகக்கவசம் இருப்பு உள்ளது.
* தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் கொரோனவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
* தமிழகத்தில் மொத்தம் 27 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
* வீட்டில் இருங்கள், தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் மொத்தம் 7,267 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* நவீன கருவியால் 30 நிமிடத்தில் சோதனை முடிவுகள் தெரிய வரும்.
* ரேபிட் சோதனைக்கான உபகரணங்கள் இன்று இரவு சென்னை வந்தடையும்.
* கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
* தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நோய் தொற்று அதிகமாகுமோ என இப்போது கூற முடியாது.