சவூதி : கொரோனா வைரஸால் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று, சவூதி அரேபியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 41 பேர் உயிரிழந்த நிலையில், 2900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சவூதி தலைநகர் ரியாத்தின் ஆளுநரும்,சவூதி மன்னர் சல்மானின் மருமகனுமான பைசல் பின் பந்தர் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவூதி மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கொரோனா பரவலை தடுக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து கொரோனாவின் வீரியத்தை உணர்ந்த சவூதி அரசு, நாட்டில் முக்கிய மருத்துவனைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தனி வார்டுகளை அவசரகதியில் உருவாக்கி வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி தலைநகர் ரியாத் மற்றும் ஜித்தா, மக்கா உள்ளிட்ட பல நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை சவூதி அரசு விதிக்கத் தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே ரியாத், மக்கா மற்றும் மதீனாவுக்குச் செல்வதற்கும், மசூதிகளில் பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.