×

டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்ததை மறைத்ததாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்ததை மறைத்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் படி போலீசார் 3 பேரை கைது ெசய்தனர். மேலும், அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1,131 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் 500க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் சிலரை மட்டும் கண்டறிய முடியவில்லை என்றும் அவர்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால் அவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற வருமாறு தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட பலர் தாமாகவே முன்வந்து சிகிச்சை பெற்று வந்தனர்.  இதையடுத்து அவர்கள் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்களை சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கொரோனா வைரஸ் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பிய வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் நேற்று முன்தினம் வரை அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், சிகிச்சைக்கும் அவர்களாகவே முன்வராமல் சென்னை பெரியமேடு பகுதியில் தங்கி இருந்தது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.  இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் படி பெரியமேடு போலீசார் வங்கதேசத்தினர் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 3 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தது உறுதியானது. அதைதொடர்ந்து வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது ஐபிசி 188,269,270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு 3 நபர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Three ,Bangladesh ,Delhi ,Delhi Conference , Three arrested , Bangladesh, hiding,participation , Delhi conference
× RELATED நீலகிரியில் காலநிலையில் மாற்றம் நீர் பனி கொட்டுவதால் குளிர் அதிகரிப்பு