×

பணத்தை சிக்கனமாக செலவு செய்க; முடங்கிய தொழில்கள் புத்துயிர் பெற ஆண்டுகள் கூட ஆகலாம்...பொருளாதார நிபுணர்கள் கருத்து

டெல்லி: உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து வருகிறது. தற்போது, நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 149 பேர்  பலியாகி உள்ளனர். நோய் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இருப்பினும், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து தொழில்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டல் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துறைகளில் சுமார் 5 சதவிதம் சரிவு காணப்பட்டாலே, இந்தியாவின் மொத்த வளர்ச்சி சுமார் 1 சதவிதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 2 சதவிகிதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது கொரோனாவின் வீரியத்தை பொறுத்து, மேலும் சரிவை சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவின் 80 சதவிதம் நிறுவனங்கள், பணபுழக்கம் இல்லாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் வீரியமடையாத நிலையில், அதன் தாக்கம் தற்போதே 53 சதவித நிறுவனங்களில் தெரிவதாக FICCI அமைப்பு கூறியுள்ளது. ரசாயன துறையை பொறுத்தவரை, ஜீன்ஸ்க்கு போடும் சாயம் தொடங்கி, மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் வரை சீனாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக உள்நாட்டில் ரசாயன தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு சுமார் 80 முதல் 90 சதவிதம் வரை சரக்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைவிட்டு போகும் நிலை உருவாகியுள்ளது. 2020ம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குறையும் என்பதில் நிபுணர்களிடையே எந்த மாற்று கருத்தும் இல்லை.

இப்படி இருக்க கூடிய நிலையில், இனி வரும் காலங்கள் மேலும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சமானிய மக்கள், தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை மிக சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய தருணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டுமே கொரோனாவின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஜூன் வரை நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தினால், இந்தியாவில் சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகக் கடுமையதாக பாதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : businesses ,economists , Spend money economically; It may take years to revive paralyzed businesses ... economists comment
× RELATED மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ்...