சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனத்தில் கொண்டு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்போது தான் அனைத்து தொழில்களும் முடக்கம், பொருளாதாரமின்மை என நாட்டில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது.இந்த சூழ்நிலையில், பிரதமர், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், எம்.பி.க்கள், கவர்னர்கள், ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோரின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதும் வரவேற்கத்தக்கது.
மேலும் ஒவ்வொரு எம்.பி.யின் 2 ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 கோடியானது அரசு நிதியில் சேரும். இந்த முடிவு பொது மக்களுக்கு பலன் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் போது அதனை வரவேற்க வேண்டுமே தவிர அரசியலாக்கக் கூடாது. மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாடே துணை நிற்க வேண்டும்.