சென்னை: டிக்டாக் செயலியில் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் பெண் காவலரின் செயல் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் செயலியை பலர் நகைச்சுவையாகவும், அறிவுப்பூர்வமாகவும் மக்களுக்கு நல்ல தகவல்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். ஆனால், சிலர் டிக்டாக் செயலியை ஜாதி ரீதியாக பல வீடியோக்களை பதிவு செய்தும், இரு சமூகத்திற்கும் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோக்களை பதிவு ெசய்தும் வருகின்றனர். அப்படி ஜாதி ரீதியாக பதிவு செய்து கலவரத்தை தூண்டும் நபர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழக காவல்துறையில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர், ‘டிக்டாக்’ செயலியில் ‘மனோரமணி’ என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அதில் பெரும்பாலான வீடியோக்கள் தனது சமூகத்தை உயர்த்தியும், மற்ற சமூகத்தை தாழ்த்தியும் அருவருக்கத்தக்க வகையில் மிரட்டும் வகையில் வீடியோக்களை பதிவு வருகிறார்.
இதற்கு டிக்டாக் செயலியில் பலர் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து மோதலை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். கொரோனா தடுப்பு தொடர்பாக பெண் காவலர் சீருடையில் புதுப்பேட்டை பகுதியை சுற்றி உள்ள நபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல நல்ல அறிவுரைகள் வழங்கி உள்ளார். இதுபோன்ற பெண் காவலரின் நல்ல கருத்துக்களை பலர் வரவேற்றுள்ளனர். ஆனால் காதலர்களை இழிவுபடுத்தும் வகையிலும், தனது சமூகம்தான் உயர்ந்தது என்று கூறி ஜாதி மோதலை உருவாக்கும் வகையிலும் வீடியோக்கள் பதிவு செய்வதை கைவிட ேவண்டும் என்பது உடன் பணியாற்றும் பல சமூகத்தை சேர்ந்த காவலர்களின் கருத்தாக உள்ளது. எனவே, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பெண் காவலரே பிரச்னைக்குரிய வீடியோக்களை தொடர்ச்சியாக டிக்டாக் செயலியில் பதிவு செய்வதை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜாதி மோதல் உருவாவதற்கு முன் சம்பந்தப்பட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.