சிவகாசி: கொரோனா விவகாரத்தில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பின்பற்றி பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கிருமி நாசினி அறையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று திறந்துவைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தோடு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பின்பற்றி பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திடமான முடிவுகளை செயல்படுத்தி வருகிறார். மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கேலி செய்பவர்கள் சமூக விரோதிகளாகதான் இருக்க முடியும். தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு குறித்து அரசு தான் முடிவு எடுக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்றும், வங்கிகள் தவணை தொகையை வசூலிக்கக்கூடாது என்றும் அரசு மனிதாபிமான அடிப்படையில் கூறியுள்ளது. இதனை அனைவரும் ஏற்று செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.