×

திருவில்லிபுத்தூர் அருகே ரோந்து போலீசாரை மறித்த யானைக்கூட்டம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே ரோந்து சென்ற மதுவிலக்கு போலீசாரை யானைக்கூட்டம் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோயில் மதுவிலக்கு போலீசார், கடந்த ஒரு வாரமாக திருவில்லிபுத்தூர், மம்சாபுரம் செண்பகத்தோப்பு, வத்திராயிருப்பு,
கான்சாபுரம், புதுப்பட்டி, அய்யனார் கோயில், சுந்தரநாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? சாராய ஊறல் போடப்பட்டுள்ளதா? கள் இறக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மப்டியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று அதிகாலை திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரோந்து பணிக்காக சென்றனர். அப்போது செல்லும் வழியெல்லாம் யானை எச்சங்கள் இருந்துள்ளன. இதைப்பார்த்து எச்சரிக்கை அடைந்த மதுவிலக்கு போலீசார் மெதுவாக சென்றனர். அப்போது அவர்கள் சென்ற பாதையின் எதிரே சற்று தொலைவில் குட்டியுடன் யானைக்கூட்டம் நின்றது. இதை பார்த்து மதுவிலக்கு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வந்த வழியே திரும்பிச் சென்று மாற்றுப்பாதை வழியாக ரோந்து பணிக்கு சென்றனர்.திருவில்லி. அருகே ரோந்து சென்ற போலீசாரை மறித்த யானை கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : police patrols ,Tiruviliputhur Elephant ,Tiruviliputhur , Elephant, kille,d police, patrols ,Tiruviliputhur
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி பிணம்