லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், பல்ராம்பூர் மாவட்ட பாஜ தலைவர் மஞ்சு திவாரி நேற்று முன்தினம் அவரது வீட்டில் பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி விளக்கேற்றுவதற்கு பதில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையினர் அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ``வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது நகர் முழுவதும் அகல் விளக்குகளாலும், மெழுகுவர்த்திகளாலும் அலங்கரித்து வெடி வெடிக்கப்பட்டது, தீபாவளி போன்றதொரு சூழலை ஏற்படுத்தியது.
இதைப் பார்த்ததும், என்னுள் உற்சாகம் பொங்கியது. அதனால் துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி சுட்டேன். ஆனால் இப்போது தவறை உணர்ந்து விட்டேன்’’ என்று கூறினார்.