காந்திநகர்: சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விற்பனை செய்யவுள்ளதாக OLX இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவருக்கு குஜராத்தில் சிலை வைக்க அம்மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து ஒருமைப்பாட்டு சிலை என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி கடந்த 2018ம் ஆண்டு அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதற்கிடையே, ஒற்றுமை சிலை என்று அழைக்கப்பட்டு வரும் வல்லபாய் படேலின் சிலை விற்பனைக்கு உள்ளதாக மர்ம நபர் ஒருவர் OLX இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் இந்தியாவில் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ உள்கட்டமைப்புக்கு அரசுக்கு பணம் தேவைப்படுவதாலும், மருத்துவமனை கட்டவும் இந்த சிலையை ரூ.30ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒற்றுமை சிலையின் தலைமை நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், குஜராத் போலீசார் மர்ம நபர் மீது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து படேல் சிலை விற்பனைக்கான விளம்பரத்தை இணையதளம் நீக்கியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஒற்றுமை சிலையின் தலைமை நிர்வாகி, அரசாங்க சொத்துக்களை விற்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த அடையாளம் தெரியாத நபர் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் OLX இல் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். இது போன்ற விளம்பரங்கள் பல கோடி மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.