காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உத்திரமேரூர் தொகுதி திமுக எம்எல்ஏ க.சுந்தர் 2020-2021 ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹30 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி அதற்கான கடிதத்தை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் வழங்கினார். கொரோனா வைரசால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பொதுமக்களுக்கு அரசு எடுக்கும் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியாக, வாலாஜாபாத் தாலுக்கா அரசு மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க 10 லட்சத்து 12 ஆயிரம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு 2 லட்சம், சாலவாக்கம், அய்யம்பேட்டை, தென்னேரி அவளூர், கீழ்பேரமநல்லூர், மானாம்பதி. களியாம்பூண்டி, படூர், சீட்டஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ₹2 லட்சம் என மொத்தம் ₹30.12 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பரிந்துரைக் கடிதத்தை சுந்தர் எம்எல்ஏ மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அளித்தார்.