சென்னை: எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வந்த நைஜீரிய மாணவன் அடுக்குமாடி குடியிருப்பு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேளரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும், நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். இவர்களில், நைஜீரியாவை சேர்ந்த விக்டர் (25) என்பவர், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இவர், பல்கலைக்கழகம் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி, படித்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பல்கலைக்கழகத்திற்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவன் விக்டர், தனது சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் அறையிலேயே தங்கியிருந்தார்.இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள விக்டரின் தாய், நேற்று முன்தினம் இரவு அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், விக்டர் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், மகனின் நண்பர் ஒருவருக்கு போன் செய்து விசாரித்துள்ளார்.
இதையடுத்து அந்த நண்பர், விக்டர் அறைக்கு சென்று, கதவை தட்டியபோதும் நீண்ட நேரமாக கதவு திறக்கவில்லை. இதனால், ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கையில் இறந்து கிடப்பது தெரிந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அறை கதவை உடைத்து, விக்டர் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விஷம் அருந்தி விக்டர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சக மாணவர்களுடன் மோதலா, காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்ஆர்எம் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மர்மமாக இறப்பது தொடர்கதையாகி வருகிறது. சமீபகாலமாக கல்லூரி விடுதியில் 6 மாணவர்கள் இறந்துள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி, மனித உரிமை கமிஷனும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு வெளிநாட்டு மாணவன் இறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.