×

விளம்பர அரசியலை தவிர்த்து கொரோனா ஒழிப்பில் மோடி தீவிரம் காட்ட வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து, கொரோனா ஒழிப்பில் பிரதமர் மோடி தீவிரம் காட்ட வேண்டும் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா நோயை எதிர்த்து பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தியில் ஒளியை ஏற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கொரோனா நோய் ஒழிப்பிற்கு தேவையான பரிசோதனை மையங்கள், சுவாச கருவிகள், முகக் கவசங்கள் பற்றாக்குறையால் நாட்டுமக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறபோது மெழுகுவர்த்தியை ஏற்றுவதனால் என்ன பயன் ஏற்பட போகிறது, போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை நோக்கி சில நண்பர்களுடன் நடைபயணம் வந்தபோது, 21 வயது இளைஞர் லோகேஷ் பாலசுப்ரமணியன் செகந்திராபாத் நகரத்திற்கு வந்தபோது மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளார். அவரது சடலம் பள்ளிபாளையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

எந்த தவறையும் செய்யாத லோகேஷ் பாலசுப்ரமணியன் இறப்புக்கு யார் பொறுப்பு, இதற்கான பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா, இத்தகைய கொடூர சம்பவங்கள் நடப்பதற்கு பிரதமர் மோடியின் ஆட்சி தான் காரணம். எனவே, பிரதமர் மோடி, இனியாவது கொரோனா ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும். மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.


Tags : Modi ,Corona , Advertising Politics, Corona, Modi, KS Alagiri
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...