போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி பகுதியில் குண்டுமல்லி அறுவடை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று படுகையான திம்மாபுரம், பெரியமுத்தூர், காவேரிப்பட்டணம், மலையாண்டஅள்ளி, புதூர், வேலம்பட்டி, குள்ளம்பட்டி, சந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கரில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித்தரும் மல்லிகை பூவிற்கு மார்க்கெட்டில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பெங்களூரு மார்க்கெட் மூடப்பட்டதால் போச்சம்பள்ளி, மத்தூர், சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த குண்டுமல்லி பூக்களை பறித்து அனுப்ப முடியாமல், விவசாயிகள் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘முழுக்க முழுக்க பெங்களூரு சந்தையை நம்பியே, போச்சம்பள்ளி பகுதியில் குண்டுமல்லி சாகுபடி செய்கிறோம். கொரோனா பாதிப்பால், பெங்களூரு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. பூக்களை கொண்டு செல்ல வழியின்றி பறிக்காமல், செடிகளிலேயே விட்டுள்ளதால் வீணாகி லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றனர்.