சென்னை: சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 59,203 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,28,990 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் 68 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவமனைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி மருத்துவமனைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. தொற்று பரவாமல் தடுக்க தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி வருகிறது. அரசு போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு கோரிக்கையை ஏற்று தனியார் மருத்துவமனைகள், கொரோனா வார்டுகளை அமைக்கிறது என்றார்.