×

மது கிடைக்காததால் விரக்தி: மாற்று போதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோஷனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் மது கிடைக்காத விரக்தியில் மாற்று வழியில் போதைக்கு உள்ளான இருவர் உயிரிழந்தனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அசின் மைதீன், அருண் பாண்டி, அன்வர் ராஜா உள்ளிட்ட மூவரும் மது கிடைக்காததால் மனதளவில் விரக்தி அடைந்தனர். இந்நிலையில் மாற்று போதை ஏற்றி கொள்ள ஷேவிங் செய்த பின்பு பயன்படுத்தப்படும் லோஷனில் குளிர் பானத்தை கலந்து மூவரும் குடித்ததாக கூறப்படுகிறது.

குடித்து சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த மூவரும் ஆபத்தான நிலைக்கு சென்றதால் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் சிகிச்சை பலனின்றி அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் உயிரிழந்தனர். அன்வர்ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டாஸ்மாக் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளதால் குடிக்கு அடிமையானவர்கள் வழியின்றி தவித்து வருகின்றனர். போதை ஏற இதுபோன்று லோசன், மாத்திரை கலந்து போடுவது என வேறு வழிகளை நாடும் குடிமகன்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Alcohol, Frustration, Alternative, Drug, Pudukkottai, Drink, Saving Lotion, Death
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...