திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் விஜயகுமாரி, ஆணையர் சந்தானம், போலீஸ் டிஎஸ்பி கங்காதரன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் முன்னாள் நகரமன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன், நேசன், லயன் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது திருவள்ளூரில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம், அமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் இந்த தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றியுள்ள 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தொற்று பரவும் அபாயம் இருப்பதால் சுகாதார துறை, மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் 27 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்பது, தனிமைப்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. வருகிற 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு தொடரும். குறிப்பிட்ட மதத்தினரால் நோய் பரவுவதாக கூறுவது அர்த்தமற்றது. வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை வைரஸ் இருக்கும் நேரத்தில் வைரல் ஆக்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.