ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம், தண்டுரை, தெற்கு பஜாரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்து, நேற்று காலை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கடையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் பொருட்களை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அதிகாரிகள் கடையில் வியாபாரம் செய்ய அனுமதி மறுத்து பூட்டுப் போடவும் உத்தரவிட்டனர்.