சென்னை: சென்னை அருகே தனியார் நிறுவன அதிகாரி, விமானத்தில் பயணம் செய்ததால், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை அருகே ஓ.எம்.ஆர்.சாலை கழிப்பட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விசாகன் (57). தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24ம் தேதி விசாகன், கம்பெனி வேலையாக டெல்லிக்கு சென்றார். அன்றைய தினமே அவர், விமானம் மூலம் சென்னை திரும்பினார். 25ம் தேதி அவருக்கு காய்ச்சலுடன், தும்மல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், தன்னிச்சையாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விசாகனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்தனர்.
உடனே, அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை பற்றிய விவரங்களை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பினர். இதைதொடர்ந்து, கலெக்டரின் உத்தரவுபடி, திருப்போரூர் வட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் பாபு ஆகியோர் விசாகன் குடியிருந்த வீடு, அவரது மனைவி, குழந்தை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தினர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா என்ற சோதனையும் நடக்கிறது. விசாகன், கடந்த 24ம் தேதி பயணம் செய்த விமானத்தில், டெல்லியில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யாரேனும் இருந்து, அவர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.