×

கொரோனா ஊரடங்கினால் பாதிப்பு: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு,..பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

போலீசாரை பாராட்டி முகக்கவசம் அளிப்பு

சென்னை: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் போலீசாரை பாராட்டி முகக்கவசம் அளித்தார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை நேற்று நேரில் வழங்கினார்.  6வது மண்டல அலுவலகத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஏழு நாட்களாக மு.க.ஸ்டாலின் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு காலைச் சிற்றுண்டியை ஸ்டாலின் நேரடியாக வழங்கியதோடு, கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும், அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார்.

பின்னர், அருகில் இருக்கும் காய்கறி அங்காடியை ஆய்வு செய்தார். அப்போது, காய்கறிகளின் வரத்து மற்றும் விலையேற்றம் குறித்தும் விசாரித்தார். ஊரடங்கினால் அவதிக்குள்ளாகியிருக்கும் வெளி மாநில மக்களுக்கு, உணவு மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியதோடு, அவர்களுக்கு தேவையான ஆடைகள், போர்வைகள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சோப்பு, பற்பசை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். அதோடு, மருத்துவர் குழுவினைக் கொண்டு அவர்களுக்கென மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கொரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 500 உதவித்தொகை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான 5 கிலோ அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் சமூக இடைவெளி முறையைப் பின்பற்றி மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உதவி கோரியிருந்த, ஜி.கே.எம் காலனி 30வது தெருவில் அமைந்துள்ள சிப் மெமோரியல் டிரஸ்ட்டை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், அவர்கள் கோரியிருந்த உதவித்தொகையை வழங்கியதோடு, அங்குள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் கூட்டமாகக் குவிந்திருந்த மக்களிடம் சமூக இடைவெளியின் அவசியத்தை எடுத்துரைத்து, அங்கு கூடியிருந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் முகக் கவசங்களை வழங்கினார்.

அதோடு, அந்த நியாய விலைக் கடையின் ஊழியருக்கும் முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், பெரவள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின், முகக்கவசங்களை தொடர்ந்து மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதால், அங்கிருந்த காவல்துறையினருக்கு அடிக்கடி மாற்றுவதற்கு தேவையான முகக்கவசங்கள் மற்றும் வெளியிடங்களுக்குச் சென்று வரும் காவல்துறையினர் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப சானிடைசர்களை வழங்கினார். ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், அன்றாட தேவைகளுக்காக மளிகைக் கடைக்கு வந்த பொதுமக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டு, சமூக இடைவெளியின் அவசியத்தை வலியுறுத்தி, அவர்கள் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினார்.

அதோடு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு, அவர்களது சேவையைப் பாராட்டி நன்றி தெரிவித்த அவர், அவர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் வழங்கினார். அப்போது சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : constituency ,MK Stalin ,Kolathurur ,Kolathur , Corona, Curfew, Kolathur Vol. MK Stalin
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...