சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார். கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2-ம் நிலையில் தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதராணமாக நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.
* கொரோனா பாதித்தவர்கள் யாருக்கும் அதிதீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இல்லை.
* கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். ஒருவர் அமெரிக்கா சென்று வந்தவர். மற்றொருவரின் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 - ஆக உயர்ந்துள்ளது.
* மேலும் கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் உருவாக்கி நோயை கட்டுப்படுத்துகிறோம்.
* கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது.
* தமிழகம் கொரோனா பரவல் நிலையில் 2 ஆம் கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை.