சென்னை: சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் மக்கள் இறைச்சி கடையை நோக்கி படையெடுத்தனர். இதனால் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறினர்.
இவ்வாறு சமூக இடைவெளி இல்லாமல் அன்று முழுவதுமே பொதுமக்கள் இறைச்சி வாங்கியதால் கொரோனா மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒவ்வாரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தொடர்ச்சியாக இறைச்சி கடைகளை மூடப்படும் என உத்தரவு பிறப்பித்து வந்த நிலையில் சென்னை மாநகராட்சி தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து இறைச்சி மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் பெரும்பாலான மீன் அங்காடிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தடையை மீறி இறைச்சி கடைகளை திறந்து வைத்திருந்தால் சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.