தேனி : தேனியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களை, மாற்று இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, கொரோனா வார்டுக்கு வெளியே திறந்த வெளியில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 3 நாட்களில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. தற்போது வரை 411 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை உத்தமபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டுக்கு கொண்டு செல்வதற்காக, மருத்துவமனையில் தற்போது உள்ள கொரோனா வார்டை விட்டு திறந்தவெளியில் காத்திருக்க வைத்துள்ளனர். சுமார் 40 நிமிடங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் திறந்த வெளியில் அமர்ந்திருந்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்காக அவர்கள் காக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.