சென்னை : சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா வார்டில் 3 தானியங்கி ரோபாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளில் இயக்கப்பட உள்ள தானியங்கி ரோபோக்களை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். Propeller techno என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த 3 ரோபோக்களுக்கு Zafi, zafing bo, zafing medic என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவையான உணவு ,குடிநீர் ,மருந்து, மாத்திரைகளை எடுத்துச் செல்லும்படி ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விஜயபாஸ்கர் கூறினார்.இதன் மூலம் வைரஸ் தொற்று பரவலை அதிகபட்சமாகத் தடுக்க முடியும் . இந்த மூன்று தானியங்கி ரோபோகளும் சுமார் ரூபாய் 3 லட்சம் இருக்கும்.இவைகளைக் கொண்டு 250 மீட்டர் முதல் ஒன்றரை கிலோ மீட்டர் வரை பொருள்களை எடுத்துச் செல்ல முடியும் என சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதன்மையர் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ரோபோக்கள் அறிமுகம் ஏன் ?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க மக்கள் 21 நாள்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் தங்களது வேலையை திறம்பட செய்து வருகின்றனர். அதிலும்மருத்துவர்களை விட செவிலியர்கள் அதிகநேரம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர்களுடனே இருந்து சேவையாக உலகம் முழுவதும் செய்து வருகின்றனர்.இதனால் அவர்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இந்நிலையில் நோயாளிகள் உடனே தொடர்ந்து சேவையில் 24 மணி நேரமும் செயல்படவும், அதே சமயம் நோய் தொற்று வராமல் இருப்பதற்கும், சில மருத்துவமனைகளில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.