புதுடெல்லி: மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 37 எம்பி.க்களின் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களை சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நேற்று (ஏப்ரல் 2) மற்றும் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இத்தேர்தல் நடக்கவில்லை. இதனிடையே, தமிழகத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் உள்பட நாடு முழுவதும் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதர உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்ததும் பதவியேற்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுப்பிய சுற்றறிக்கையில், `கொரோனா பாதிப்பினால் 21 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்படும் வரை, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள 37 உறுப்பினர்களின் பதவி பிரமாணமும், ரகசியம் காப்புறுதி பிரமாணமும் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.