சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் நேற்று மாலை கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடைய 86,342 பேர் கண்டறியப்பட்டு வீட்டில் கண்காணிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று வரை (ஏப்.1) 234 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இன்று (ஏப்.2) மட்டும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் சென்னையை சேர்ந்தவர். இவரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர். இதை சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 மாவட்டங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது. தமிழகத்தில் தற்போது 17 கொரோனா சோதனை மையங்கள் உள்ளன. புதிதாக 6 மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய அரியலூரை சேர்ந்த நபருக்கு கேரளா நபர் மூலம் தொற்று பரவி உள்ளது. இந்த மாலில் தொற்று உறுதியான நபருக்கு அதிக தொடர்பு இருப்பதாக கருதுகிறோம். இவர்களையும் கண்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். என்றார். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 264 பேர். தமிழகத்தில் மொத்தம் 309 பேர் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது.
419 பேர் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா முதல் இடத்திலும், 265 பேர் பாதிக்கப்பட்டுள்ள கேரளா 3வது இடத்திலும், 219 பேர் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி 4வது இடத்திலும், 113 பேர் பாதிக்கப்பட்டுள்ள உத்தரபிரதேசம் 5வது இடத்திலும் உள்ளன. மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.