புதுடெல்லி: டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் ஆடியோ மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 568 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூல்ம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,965 ஆக அதிகரித்துள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியா முழுவதும் கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத் அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாள் முடக்கம், உரிய பலனில்லாமல் போயுள்ளது. இதனால், மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் தலைமறைவானார். போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால், அவர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவுவது தடுக்கப்படும் என்று மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள தப்லிஹ் ஜமாத் அமைப்பு தலைவர் மௌலானா, ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டாக்டர்கள் அறிவுறுத்தியபடி நான் டெல்லியில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். ஜமாத்தை சேர்ந்த அனைவரும் நாட்டில் எங்கிருந்தாலும் சட்டத்தின் உத்தரவுகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள்ளேயே இருங்கள், அரசாங்கத்தின் உரிமைகளை பின்பற்றுங்கள். எங்கும் கூடியிருக்க வேண்டாம். தொற்றுநோய், மனிதனின் பாவங்களால் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த ஆடியோவில் கூறியுள்ளார். தற்போது, இந்த ஆடியோ சமூக வலையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.