×

கள்ளச்சந்தையில் மது விற்றவர்களை மிரட்டி ரூ.17 ஆயிரம் பறித்த அதிமுக பிரமுகர்

* போலீஸ் வாகனம் உடைப்பு
* விருகம்பாக்கத்தில் பரபரப்பு
சென்னை: கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்களை அதிமுக நிர்வாகி ஒருவர் மிரட்டி விலை உயர்ந்த பிராந்தி மற்றும் ₹17 ஆயிரம் பணம் பறித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் போலீசாரின் ரோந்து வாகன கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் விருகம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலிகிராமம் தேவராஜ் நகர், இந்திரா தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் தனது நண்பர் அருண் (18) என்பவருடன் சேர்ந்து கள்ளச்சந்தையில் இரவு நேரங்களில் விருகம்பாக்கம் பகுதியில் விலை உயர்ந்த மதுக்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த அதிமுக பிரமுகர் குமார் மற்றும் ராஜா கார்த்திக் ஆகியோர் மது விற்பனை செய்வதை பார்த்து பாலகிருஷ்ணன் மற்றும் அருணை மிரட்டி விலை உயர்ந்த 3 பிராந்தி, 3 பீர் மற்றும் ₹17 ஆயிரம் பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் குடிபோதையில் நண்பர்களுடன், அதிமுக பிரமுகர் வீட்டிற்கு சென்று தங்களிடம் பறித்த மது பாட்டில்கள் மற்றும் ₹17 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்கும் படி கூறி தகராறு செய்தனர். இதனால் அதிமுக பிரமுகர் தரப்புக்கும், பாலகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  அதிமுக பிரமுகர் தரப்பிடம் தகராறு செய்த பாலகிருஷ்ணன் மற்றும் அருணை பிடிக்கம்போது எதிர்பாராத விதமாக போலீசாரின் ரோந்து வாகனத்தின் பின் பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். இதையடுத்து போலீசார் போதையில் தகராறு செய்த பாலகிருஷ்ணன் மற்றும்  அருணை கைது செய்தனர். மேலும், ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Ammukkam Pramukh ,liquor dealers , Ammukkam Pramukh, accused, extorting, Rs.17,000, liquor dealers
× RELATED சாராய வியாபாரிகள் 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது