சென்னை: ஆபத்தில் இருந்து தமிழகத்தை காக்க சமூகப் பரவலை தடுக்க சமூகப் பொறுப்பு வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இதுவரை 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தான் கொரோனா வைரஸ் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 616 பேர் அடையாளம் காணப்படவில்லை. இது தான் தமிழகத்தில் சமூகப்பரவலை தொடங்கி வைத்து விடுமோ அல்லது தொடங்கி வைத்திருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களின் சமூகப்பொறுப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.