டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் பிரதமரின் நிதி ெதாடர்பாக கடுமையாக சாடியுள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்ச்சையளிக்கவும், பாதிக்கப்படுவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், வைரஸ் பரவலை தடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி ‘பிஎம் கேர்ஸ்’(PM CARES) என்ற தனி நிதியை தொடங்கியுள்ளார். இது குறித்து பிருத்விராஜ் சவான் தனது டிவிட்டரில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த 1948ம் ஆண்டு பண்டிட் ஜவஹர்லால் நேருவால் பிரதம மந்திரி நிவாரண நிதி அமைப்பு தொடங்கப்பட்டது. இப்போது அவரை அந்த நிவாரண நிதி அமைப்பில் இருந்து நாட்டு மக்களுக்கு பேரிடர் சமயங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், நரேந்திர மோடியோ கொரோனா நிதி திரட்டுவதற்காக ‘பிஎம் கேர்ஸ்’ என்ற தனி நிதி அமைப்பை அறிவித்துள்ளார். இது போன்ற காலங்களில் மக்களுக்கு நிவாரண உதவிகளை பல்வேறு உலக நாடுகள் வழங்கி வருகின்றன. அதற்காக எந்த நாடும் ஜனாதிபதி நிவாரண திட்டம் என்றோ, பிரதமர் நிவாரண திட்டம் என்றோ அல்லது டிரம்ப் நிவாரண திட்டம் என்றோ எந்த நாடும் அறிவித்ததில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா(பிரதம மந்திரி ஏழைகள் நலன் திட்டம்) என்று கொரோனா நிவாரண உதவி திட்டத்துக்கு பெயர் சூட்டி இந்த இக்கட்டான தருணத்திலும் சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
100% வரி விலக்கு
கொரோனா வைரஸ் போராட்டத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரநிலை நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது பி.எம்-கேர்ஸ் நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை வருமான வரிச்சட்டம் 80ஜி பிரிவின் கீழ் 100% விலக்கு பெற தகுதியுடையதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.