சென்னை : டெல்லியில் நடந்த நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யாரேனும், கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் மார்ச் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மாநாட்டில் பங்கேற்று விட்டு, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நேற்று(மார்ச்31) ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 50 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில், 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இதனிடையே மீதமுள்ளவர்களை கண்டறிய 50 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியமும் நமக்கு முக்கியம். கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதி முதல் 20ம் தேதி வரை, டில்லியில் நடந்த நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட யாரேனும், இன்னும் கொரோனா பரிசோதனைக்கு உங்களை உட்படுத்தி கொள்ளவில்லை எனில் உடனடியாக 7824849263, 044 46274411 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.