×

கொரோனா எதிரொலி குமரியில் வாழை, அன்னாசி ஏற்றுமதி பாதிப்பு: கோடிக்கணக்கில் இழப்பு

குலசேகரம்: குமரி மாவட்டம் ரப்பர், வாழை, அன்னாசி,  தென்னை, நெல்,  மற்றும்  மலையக பொருட்கள், கிழங்கு வகைகள் விளைச்சலுக்கு பெயர் பெற்றது. இங்கு  விளையும் வாழை, அன்னாசி மற்றும் தேன் போன்றவற்றிற்கு வெளி மாநிலங்கள்  மற்றும் வெளிநாடுகளில் மவுசு அதிகம்.தற்போது குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வாழை, அன்னாசி, தேன் ஏற்றுமதி, ெகாரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடங்கியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக, வெயில் காலங்களில் வாழை மற்றும் அன்னாசி பழங்கள்  அதிக அளவில் உள்ளூரிலும், வெளியிடங்களிலும் விற்பனையாகும். இதனால் இந்த காலகட்டத்தில்  லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் விவசாயிகள் பெருமளவு அன்னாசி, வாழை  போன்றவற்றை பயிரிடுகின்றனர். இந்த நிலையில் கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக  இப்பழங்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் தடைபட்டுள்ளது. இதனால் அறுவடைக்கு  தயாரன நிலையில் அன்னாசி பழங்கள் வாங்குவதற்கு ஆள் இல்லாததால்  தோட்டத்திலேயே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

 கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நேந்திரன் வாழைக் குலைகள் கிலோ ₹18க்கு வணிகர்கள் கொள்முதல் செய்தனர். பழக்கடைகளில் 3 கிலோ வாழைப்பழங்கள் 100க்கு விற்பனை செய்யப்படு வந்தது. இதேபோல, வெயில் காலத்தில் அதிக விலைக்கு விற்பனையாக வேண்டிய அன்னாசி பழங்கள் தற்போது கிலோ 12க்கு விற்பனையாகின்றன. இதனால், வெயில் காலத்தில் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழை, அன்னாசி பயிர் செய்த விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளதுடன், நஷ்டத்திற்கும் ஆளாகியுள்ளனா். இதுகுறித்து அன்னாசி பழ விவசாயி  ஹென்றி கூறியது: குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நேந்திரன் பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், வாழை விவசாயிகள் பெரும் துயரில் உள்ளனர். வாழை விலை வீழ்ச்சி காரணமாக மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அன்னாசி நடவு அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 3 ஆயிரம் ஹெக்டேரில் அன்னாசி நடப்பட்டுள்ளது. பொதுவாக, மார்ச் முதல் மே வரையிலான காலங்களில் அன்னாசி பழங்களுக்கு அதிக விலை கிடைக்கும். இதையொட்டி, இம்மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் அன்னாசி நடவுசெய்யப்படும்.

 அவ்வாறு அறுவடை செய்யப்படும் அன்னாசிப் பழங்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அன்னாசி பழ ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ 40க்கு விற்பனையான அன்னாசிப் பழங்கள் தற்போது ₹12க்கு விற்பனையாகின்றன. விலை குறைந்ததால் பல தோட்டங்களில் அன்னாசி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளன. வாழை மற்றும் அன்னாசி பழங்களின் விலை குறைந்துள்ளதால், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அன்னாசி பழங்கள், எலுமிச்சை பழங்கள், தேன் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் இவற்றை மக்கள் அதிகம் உண்ண வேண்டும். இதுகுறித்து அரசு விழிப்புணா–்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்றாா். வெளியிடங்களுக்கும்  வெளி  நாடுகளுக்கும் அனுப்ப முடியாத நிலையுள்ளதால் நமது மாநிலத்தின் தேவையான  பகுதிகளுக்கும் இந்த பழங்கள் சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்தால் ஓரளவு  நஷ்டத்தை ஈடுகட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Millions , Banana ,Pineapple, Corona ,Kumari,Millions
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...