சென்னை: லண்டனிலிருந்து திரும்பிய மகனை, பிளாட் வாடகைக்கு எடுத்து அங்கு தனிமைப்படுத்தியுள்ளார் நடிகர் சுரேஷ் கோபி. மலையாள முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் சமஸ்தானம், தீனா, ஐ படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார். இவரது இளைய மகன் லண்டனிலிருந்து சமீபத்தில் கேரளாவுக்கு திரும்பினார். அவர் வந்த விமானத்தில் ஒரு பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதை அறிந்ததும் மகனை தனிமைப்படுத்த முடிவு செய்தார் சுரேஷ் கோபி.
அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு மகனை அனுப்பி, தனிமைப்படுத்தியுள்ளார். இது குறித்து சுரேஷ்கோபி கூறும்போது, ‘எனது மகனுக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனாலும் அரசு உத்தரவிட்டுள்ளது போல், அவனை தனிமைப்படுத்தியுள்ளேன்’ என்றார்.