மதுரை: மதுரையில், வைகை ஆற்றின் குறுக்கே உள்ள ஏ.வி. மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து மேம்பாலங்களையும் மூட போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நேற்றுமுதல் பாலங்கள் மூடப்பட்டன.
மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடந்த 24ம் தேதி முதல் அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மதுரை நகரில் வைகை ஆற்றின் குறுக்கே உள்ள ஏ.வி. மேம்பாலம் உட்பட அனைத்து மேம்பாலங்களும் இருபுறமும் மூடப்படும். அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே வழி விடப்படும்.
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வந்து செல்லும் காவல்துறை அனுமதி பெற்ற மொத்த வியாபாரிகளின் 520 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தெருவோர மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வேண்டும். அங்கு சமூக இடைவெளி விட்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் டூவீலர்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியமில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். போலீசாரும் சமூக இடைவேளி விட்டு பணி செய்யவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.