சென்னை : நெருங்கிய உறவினரின் திருமண நிகழ்வுகள், மரணம் மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் வழங்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், 67 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் திருமண நிகழ்வுகள், இறுதி சடங்கில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கும் வெளியூர்களில் இருந்து சென்னை வருவோருக்கும் அனுமதி வழங்குமாறு இதுவரை 9, 000 மின்னஞ்சல்கள் வந்து உள்ளதாக கூறினார். 144 தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில், சென்னை நகரில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டிய தேவை இருந்தால் உரிய அடையாள அட்டையுடன் என்ற gpcorona2020@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்து சரிபார்த்த பின்னரே அவசர பாஸ் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.