சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் அதன் நோக்கத்தை எட்டுவதற்கு பயனுள்ளவையாக உள்ளன. அதேநேரத்தில் வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மீன்பிடி துறைமுகங்கள் மூடப்பட்டு விட்ட நிலையில், அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும், அந்தமானிலும் ஏராளமான தமிழர்கள் தவித்துக் கொண்டிருகிறார்கள். கொரோனா வைரஸ் நோயை தடுப்பதே அரசுக்கு பெரும் பணியாக இருக்கும் போதிலும், அண்டை மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. எனவே கேரளம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள் இப்போது உள்ள அதேபகுதியில் உணவு உள்ளிட்ட வசதிகளுடன் கண்ணியமாக வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக அம்மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேச வேண்டும்.