பெங்களூரு: மது கடைகள் திறக்கப்படாததால் குடிமகன்கள் மது கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடிமகன்கள் சார்பில் பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கும், கலால் துறை அமைச்சர் நாகேஷுக்கும் வாட்ஸ் அப் மூலம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், ‘கர்நாடக அரசுக்கு மதுபானம் பயன்படுத்தும் அபிமானிகளின் கோரிக்கை. மாநிலத்தில் 6.5 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் கணிசமானவர்கள் மது குடிக்கிறார்கள்.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் மது கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால், மது குடிப்பவர்கள் நொந்து நூலாகி உள்ளனர். அரசு எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான். அதே நேரத்தில் மது பிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மது கடைகளை திறக்க வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் நாங்கள் 6 அடி சமூக இடைவெளி விட்டு நின்று மது வாங்கிக் கொள்கிறோம்,’ என கூறப்பட்டுள்ளது.