சென்னை: அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமேற்படிப்பு மாணவருக்கு ெகாரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு விடுதியில் தங்கியிருந்து பயிற்சி மருத்துவராக 25 வயதுடையவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி திருச்சிக்கு சென்று விட்டு தன்னுடைய பெற்றோரை பார்த்து விட்டு 23ம் தேதி சென்னைக்கு கூட்ட நெரிசலான பேருந்தில் வந்துள்ளார். இதையடுத்து கடந்த 24, 25ம் தேதி வரை முகக் கவசம் எதுவும் அணியாமல் பணியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் தன்னுடன் பயின்ற மாணவர்களுடன் வகுப்பறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 26ம் தேதி வகுப்பறையில் இருக்கும் போது காய்ச்சல் அதிகமாகியதால், வகுப்பறையில் உள்ள பெஞ்சில் சுருண்டு, படுத்து விட்டார். இதையடுத்து, தன்னுடன் பயின்ற மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு பல்வேறு சோதனை செய்யப்பட்ட பிறகு விடுதியில் தனிமைப்படுத்தி இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அவர் கடந்த கடந்த 2 நாட்களாக விடுதியில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து நேற்று 27ம் தேதி பரிசோதனை முடிவுகளில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவருடன் விடுதியில் தங்கியிருந்த 45 மாணவர்கள் விடுதியை விட்டு வெளியில் எங்கும் போகக்கூடாது என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அரும்பாக்கத்தில் உள்ள யோகா மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.