பெரம்பூர்: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவரது கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 64, 65, 66, 67, 68 மற்றும் 69 ஆகிய வட்டங்களை சேர்ந்த 900 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு திமுக சார்பில், பாதுகாப்பு உபகரணம் மற்றும் உணவுப் பொருள் வழங்கும் நிகழச்சி நேற்று நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ பங்கேற்று 900 பேருக்கான கையுறை, முகக்கவசம், சோப்பு, கிருமிநாசினி மற்றும் ரொட்டி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில், 3 கிலோ அரிசி, அரை கிலோ எண்ணெய், அரை கிலோ பருப்பு ஆகியவற்றை மண்டல அதிகாரி நாராயணன் மற்றும் செயற்பொறியாளர் செந்தில்நாதன், நாச்சான் ஆகியோரிடம் வழங்கினார்.
பின்னர் சேகர்பாபு எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் திமுகவினர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அவரது கொளத்தூர் தொகுதியில் 900 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் சொந்த செலவில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக மண்டல அலுவலரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி மற்றும் நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.