பெரம்பூர்: கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ம் தேதி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தெருநாய்கள் உணவின்றி தவித்து வருவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருநாய்கள் காப்பகம் மற்றும் அறுவை சிகிச்சை மையத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் பால், பிஸ்கட், பிரட் உள்ளிட்டவைகளை திரு.வி.க.நகர் செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
ஊரடங்கு முடியும் வரை இந்த நாய்கள் தொடர்ந்து பராமரித்து, உணவு அளிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலரும் இங்குள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.