×

சினிமா பட பாணியில் சம்பவம்; பேய் விரட்டுவதாக நினைத்து கணவனை கொன்ற மனைவி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

வில்லியனூர்: புதுச்சேரி, வில்லியனூரில் பேய் விரட்டுவதாக நினைத்து கணவனை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை வில்லியனூர், கூடப்பாக்கம், சீனிவாச நகரை சேர்ந்தவர் மஞ்சு
நாதன் (49). கட்டிட தொழிலாளி. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் 20 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த நிலையில், தொழில் நிமித்தமாக கூடப்பாக்கம் பிரதாப்புடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பிரதாப் தனது அக்காள் சத்யாவை (37), நண்பர் மஞ்சுநாதனுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். தற்போது அவர்களுக்கு சரளா (18), சர்மிளா (16) என்ற 2 மகள்களும், மணி (14) என்ற ஒரு மகனும் உள்ளனர். மஞ்சுநாதனுக்கு குடிபழக்கம் உண்டாம். இதனால் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுநாதன் வெளியே சென்று, வீடு திரும்பினார். அப்போது கணவர் மஞ்சுநாதனை கீழேதள்ளி கயிற்றால் கட்டிவைத்த சத்யா கட்டையால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் மஞ்சுநாதனுக்கு மயக்கம் ஏற்படவே அக்கம் பக்கத்தினரிடம் மனைவியும், குழந்தை களும் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் மஞ்சுநாதனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மஞ்சுநாதன் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவி கட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சத்யாவை உடனடியாக கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கொலைக்கான காரணம் குறித்து போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாதன், புதுச்சேரியைச் சேர்ந்த சத்யாவை 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கூடப்பாக்கத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். கட்டிட வேலைக்கு செல்லும் அவர், அவ்வப்போது குடித்து விட்டுவந்து மனைவி, குழந்தைகளை அடிப்பாராம். அப்போது காத்து கறுப்பு பிடித்ததுபோல் அவரது செயல்பாடு இருக்குமாம். இதுபோன்ற நேரத்தில் கணவரை கோயில் பூசாரிகளிடம் அழைத்துச் சென்று மந்திரித்துவிட்டு வருவது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வேலையில்லாமல் தம்பதி வீட்டில் இருந்துள்ளனர். 2 நாட்களாக மஞ்சுநாதன் மதுஅருந்த முடியாமல் ஏமாற்றமடைந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டு விரக்தியில் வீடு திரும்பியுள்ளார்.

காத்து கறுப்பு பிடித்தவர்போல் தன்னையும், குழந்தைகளையும் அவர் தாக்கும் வகையில் அவரது செயல்பாடு இருந்துள்ளது. அரசின் தடை உத்தரவால் வெளியே செல்ல முடியாது என்பதால் தனது கணவரின் கைகளை கயிற்றால் கட்டி கீழேபடுக்க வைத்துள்ளார். பின்னர் வீட்டில் சாமி கும்பிட்டு பூஜை செய்தபோது சத்யா மீது சாமி இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த கட்டையை எடுத்து கணவரை சரமாரி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த மஞ்சுநாதனின் காதில் இருந்து ரத்தம் வெளியேறவே குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர். சிறிதுநேரத்தில் தனது தாயும் மயக்கமடைந்த நிலையில், குழந்தைகள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தந்தையை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். பிறகு வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி அங்கிருந்த மனைவியை உடனடியாக சுற்றி வளைத்து பிடித்தனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் சத்யா மீது வழக்குபதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். இதனிடையே மஞ்சுநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சத்யாவை போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சினிமா பட பாணியில் நடந்தேறிய கொலை சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Incident , Ghost, wife who killed her husband
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...