சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக விலையேற்றம் நீடிக்கிறது.கொரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் இருந்து வந்தது.இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனை முடங்கியுள்ள இச்சூழலில் தங்கம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக, மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறையும் போது விலை குறைவது வழக்கம். ஆனால் இப்போது தங்கம் விலை உயர்ந்திருப்பது அசாதாரணமாக இருக்கிறது.சென்னையில் இன்று (மார்ச் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,201 ஆக உள்ளது. நேற்று இதன் விலை 4,201 ரூபாயாக இருந்தது.8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33,344லிருந்து ரூ.33,608 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 264 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.70 ஆகவே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 41,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.