×

வீட்டிற்குள் முடங்கியிருப்பது நம்மில் எத்தனை மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது?

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தனித்திருப்பதாலும், மிகச்சிறந்த சுகாதாரத்தை கடைபிடிப்பதாலும் மற்ற தொற்றுநோய்கள் அதிக அளவில் குறைந்து இருக்கின்றன. இந்த இருண்ட காலத்தில் சீனாவில் சில அற்புதமான மாற்றங்களும் நடத்து இருக்கின்றன. அதை எதிர்கொள்ள நாமும் தயாராவோம்.

காற்று மாசு குறைந்தது
தொழிற்சாலைகள் மூடல், பயணத்திற்கு தடை ஆகியவை பொருளாதார பேரழிவிற்கு வழிவகுத்தாலும், இந்த முடிவுகளால் சுற்றுப்புற சூழலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மார்ச் 1 வரை 4 வாரங்கள் சீனாவில் கார்பன்டை ஆக்ஸைடு வெளியீடு 20 கோடி டன் அளவிற்கு குறைந்திருக்கிறது அல்லது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அர்ஜென்டினா, எகிப்து, வியட்நாம் நாடுகளை விட கார்பன்டை ஆக்ஸைடு வெளியீடு இது மிகவும் குறைவு ஆகும். மேலும் சீனாவை முடக்கியதால் எரிசக்தித்துறைக்கு தேவைப்பட்ட நிலக்கரி அளவு 36 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் கச்சா எண்ணெய் பயன்பாடும் குறைந்துள்ளது. இதனால் காற்றுமாசு குறைந்துள்ளது.

சுகாதார மேம்பாடு
சுகாதார அதிகாரிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த அறிவுறுத்தல்களால் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கைகளை அடிக்கடி கழுவுங்கள் என்று பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அடிக்கடி கூறி, எப்படி முறைப்படி கைகழுவ வேண்டும் என்று செய்து காண்பித்துள்ளனர். இதன்மூலம் ஜப்பான் உள்பட பல நாடுகளின் சுகாதாரம் உயர்தரத்தில் மேம்பட்டுள்ளது. இதனால் புளுநோய் தாக்கம் கடுமையாக குறைந்துள்ளது. மார்ச் வரை 72 லட்சம் பேர் புளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் புளு தாக்கம் அங்கு இல்லை. இந்த தாக்கம் வழக்கமாக மே மாதம் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வனவிலங்குகள் பாதுகாப்பு
கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது இது வரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சீனாவின் வுகான் நகரில் பல்வேறு வகையான வனஉயிரினங்களை உண்பதற்காக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதுதான் பெரிதாக இந்த நோய் வெளிவந்த போது பேசப்பட்டது. வௌவால்கள் மற்றும் அருகி வரும் இனமான எறும்புத்தின்னி உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகளால் கொரோனா பரவியதாக கூறப்பட்டது. இதையடுத்து சீனா கடந்த பிப்ரவரியில் உடனடியாக வனவிலங்கு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு அதிரடி தடை விதித்தது. இதை சுற்றுப்புற ஆர்வலர்கள் வரவேற்றனர்.

சமூகவாழ்க்கையின் மறுதொடக்கம்
சில வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் முடக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய கடினமான சூழல் என்றாலும் குடும்ப ரீதியாக, சமூக ரீதியாக பல மறுசீரமைப்புகளை இந்த முடக்கம் உருவாக்கியிருக்கிறது. இதை சமூக உற்சாகத்தோடு சிலர் அணுகியிருக்கிறார்கள். மேலும் அதிகநேரம் குடும்பத்தோடு செலவிடுவது மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்வதற்கு இந்த நேரத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் நன்கொடை
கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்கு கிரக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சமும், வழங்க சச்சின் டெண்டுல்கர் முடிவு செய்துள்ளார். இந்திய விளையாட்டு வீரர்கள் அளித்த நன்கொடையில் இது மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் தொடர்
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாள் முடக்கம் அறிவித்துள்ளதால், மக்கள் பொழுதை போக்க வழியின்றி வீட்டுக்குள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்பு டிவி.யில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த ராமாயணம், மகாபாரதம்  தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என சமூக இணையதளங்கள் மூலமாக மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜவடேகர் டிவிட்டரில் விடுத்துள்ள பதிவில், ‘பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தூர்தர்ஷனில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ராமானந்த் சாகர் இயங்கிய ராமாயணத்தின் ஒரு தொடரும், மற்றொரு தொடர் இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார்.

போலீஸ் தடியடிக்கு பாலிவுட் கண்டனம்
மத்திய அரசு 21 நாள் முடக்கம் அறிவித்துள்ள நிலையில் விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவது, தோப்புக் கரணம் போடச் சொல்வது, தவழ்ந்து செல்ல வைப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த செயலுக்கு பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் அனுராக் கஷ்யாப் டிவிட்டரில் விடுத்துள்ள தகவலில், ‘இது மிகவும் பயங்கரமானது,’ என குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளரும், நகைச்சுவை நடிகருமான வரூண் குரோவர் இந்த வீடியோவை வெளியிட்டு. ‘ஒரு தொழிலாளி நடந்து கூட சொந்த ஊருக்கு செல்ல முடியாதா? தெரியாத வைரசுக்காக, அவர்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும் என இந்த அரசு விரும்புகிறதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். டைரக்டர் அனுபவர் சின்ஹா கூறுகையில், ‘‘மக்களை இதுபோல் அடிப்பது சட்டரீதியானது?’’ என்றார்.

கொரோனா மீட்பு பணிக்கு பேரிடர் மீட்பு படை தயார்
தேசிய பேரிடர் மீட்பு படையின் (என்டிஆர்எப்) இயக்குனர் பிரதான் கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கோவிட்-19 மீட்பு பணிக்காக ஒவ்வொரு பட்டாலியனிலும் 84 சிறு குழுக்களை உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு பட்டாலியனிலும் 600 வீர்கள் பாதுகாப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். நாங்கள் தயார் நிலையில் உள்ளதாக, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்கள் கொரோன வைரஸ் தடுப்பு பணிக்கு எங்கள் உதவியை நாடியுள்ளன,’’ என்றார்.

நுணுக்கமாக அணுக ராகுல் அறிவுரை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சில குழந்தைகள் சாப்பிட மறுக்கும் வீடியோவை வெளியிட்டு டிவிட்டரில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர், `கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பிரச்னையை மிக நுணுக்கமாகவும் கருணையுடன் அணுக வேண்டும். ஊரடங்கு உத்தரவு நாட்டில் உள்ள ஏழைகள், நலிவுற்றோரை பேரழிவுக்கு ஆளாக்கியுள்ளது. எனவே, நாம் கவனமாக அணுக வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.



Tags : many ,home , Corona, ODI Payroll, Task Force Employees Union
× RELATED தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்!