செங்கல்பட்டு: அரசின் உத்தரவை மீறி, கடை நடத்திய சூப்பர் மார்க்கட் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், காய்கறி மார்க்கெட். ஆவின்பால் பூத். மருந்து கடைகள். பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து போலீசார், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் சிறு கடைகளை தவிர, பெரிய வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது. மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று காலை, இந்த கடை உத்தரவை மீறி திறக்கப்பட்டது. இதையறிந்ததும், நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அனைவரையும் விரட்டி அனுப்பினர். மேலும், தடையை மீறி கடையை திறந்த சூப்பர் மார்கெட் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.