தாம்பரம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், சந்தோஷபுரம், அகரம்தென், மாடம்பாக்கம், சேலையூர், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, சானடோரியம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதி மக்கள் தாம்பரம் மார்க்கெட்டுக்கு வந்து, காய்கறி வாங்கி சென்றனர். இங்கு, அதிகப்படியான கூட்டம் கூடுவதால், நோய் பரவல் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தாம்பரம் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை மூட போலீசார் உத்தரவிட்டனர். இதனால் 2 நாட்களாக மார்க்கெட் செயல்படவில்லை.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் ஆலோசனைப்படி, பொதுமக்களுக்கு நோய் பரவலை தடுக்கும் விதமாக காய்கறி கடைகளை பிரித்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் காய்கறி கடைகள் அமைத்தனர்.
இங்கு அமைக்கப்பட்ட காய்கறி கடைகளில் சமூக இடைவெளியில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதேபோல், நெருக்கடியான இடத்தில் செயல்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மார்க்கெட் ஐஓசி பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.