தாம்பரம்: கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். இதை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு தாம்பரம் பழைய ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் சுரங்கப்பாதை அருகே சிறுவன் ஒருவன் போலீசாரின் ரோந்து பைக்கில் அடிக்கடி உலா வருகிறார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுவன் யார்?, அவன் உலா வரும் ரோந்து பைக் யாருடையது?, ரோந்து பைக்கில் சிறுவன் உலா வருவது தெரிந்தும் போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.