திருவனந்தபுரம்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 126 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வயதானோர்கள், மாற்றுத்திறனாளிகள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் கஷ்ட படுகின்றனர். அதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் இளைஞர்கள் தொண்டு நிறுவனத்தை கேரள அரசு உருவாக்கியுள்ளது. இதில் 22 வயது முதல் 40 வயது வரை உள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்யும் பணிகள் பின் வருமாறு;
* 200 பேர் கொண்ட குழுக்கள் மாநிலம் முழுவதும் உள்ள 941 பஞ்சாயத்துகளில் செயல்படும்.
* 500 பேர் கொண்ட குழுக்கள் 87 நகராட்சிகளிலும் 750 பேர் கொண்ட குழுக்கள் 6 பெரிய நகரங்களிலும் வேலை செய்வார்கள்.
* தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களைக் கண்காணிக்கவும் இவர்கள் உதவுவார்கள்.
* அவர்களுக்குச் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும். தன்னார்வலர்களுக்கு ஆகும் போக்குவரத்துச் செலவையும் அரசே ஏற்கும். இவ்வாறு கேரளா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.